தேர்தல் பணிக்கு மறுப்பு


 

சென்னை : 'தேர்தல் பணி பயிற்சி வகுப்புக்கு வராத ஆசிரியர்கள், மருத்துவ குழு முன் ஆஜராக வேண்டும்' என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பள்ளிக்கல்வி துறை சார்பில், மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, நான்கு கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இதுவரை, சில மாவட்டங்களில், இரண்டு கட்ட பயிற்சி வகுப்புகளும், சில மாவட்டங்களில், முதல் கட்ட பயிற்சி வகுப்பும் முடிந்துள்ளன.இந்நிலையில், பல மாவட்டங்களில் ஆசிரியர்கள், தங்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளதாக கூறி, பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவில்லை.

அதனால், ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, நோய் பாதிப்பு உள்ளதாக கூறி, தேர்தல் பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்களுக்கு, மருத்துவ சோதனை நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'தேர்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத ஆசிரியர்கள், தங்களின் மருத்துவ சான்றிதழ்களுடன், கலெக்டர் அலுவலக மருத்துவ குழு முன் ஆஜராக வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பணிக்கு வர மறுத்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்