பள்ளிகளே மூடியுள்ள நிலையில் வயது வந்தோர்க்கு கல்வி உடனடி தேவையா? கற்போம் எழுதுவோம் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்.தமிழக அரசுக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற துணைப் பொதுச்செயலாளர் இலா.தியோடர் ராபின்சன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்........ கற்போம் எழுதுவோம் எனும் பெயரில் , 15 வயதிற்கு மேற்பட்டு, எழுத்தறிவு இல்லாதவர்களை கண்டறிந்து , அவர்களுக்கு எழுத்தறிவு கற்பிக்கும் அரசின் திட்டத்தை, பாதுகாப்பு கருதி பள்ளிகளே மூடப்பட்டு இருக்கும் இந்த கொரோனா பாதிப்புக் காலத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்த, ஆணைப் பிறப்பித்துள்ளதற்கு ஆசிரியர் மன்றம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

       பள்ளி சாரா வயதுவந்தோர் கல்வி இயக்குனர்  அவர்களின் செயல்முறைகள் ..எண் 743/2/2020 நாள்22-10-20 அடிப்படையில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த ஆணையில், கற்போம் எழுதுவோம் என்ற திட்டத்தை, மத்திய அரசானது தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதங்கள் No.9 .3/2020/நாள் 08-05-20. 30-09-20.14-10-20 மற்றும் திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டம் முடிவுகளின் அடிப்படையில் , அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப் படுவதாகவும் , அதனை  தன்னார்வலர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்றும், ஒருவேளை தன்னார்வலர்கள் கிடைக்காத பட்சத்தில், ஆசிரியர்களே அப்பணியில் ஈடுபட்டு எவ்வித புகார்களுக்கு இடம் கொடாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பித்துள்ளார்.

     மத்திய , மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டுள்ள இத்திட்டத்திற்கு, ஊதியம்  மதிப்பூதியம் எதுவும் இல்லாமல், தன்னார்வலர்களை பயன்படுத்தி செயல்படுத்தக் கூறுவது சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்க முயற்சித்து அதன்மூலம் இத்திட்டத்தை தோல்வி அடையச் செய்யும்  செயலா? அல்லது ஆசிரியர்களுக்கு மேலும் பணிச்சுமையை உருவாக்கி, மன உளைச்சலை ஏற்படுத்தும் முயற்சியா ? என ஆசிரியர் மன்றம் கேள்வி எழுப்புகிறது.

     ஏற்கனவே கற்கும் பாரதம்  என்னும் திட்டம் , தமிழகத்தின் 9 மாவட்டங்களில் செயல்படுத்தி தற்போது அதனை பெயர் மாற்றி கற்போம் எழுதுவோம் என தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது

 கற்கும் பாரதம் திட்டத்தில் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு 2000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்பட்டது . கற்கும் பாரதம் திட்டத்தில் படித்த நபர்கள் எட்டாம் வகுப்பு வரை படித்து சான்றிதழ் பெற்று அதனை தனது வாழ்க்கை செயல்பாடுகளுக்கு அரசு சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினர். ஆனால் தற்போதைய கற்போம் எழுதுவோம் திட்டத்தில் , பயிற்சியாளர்களுக்கு எவ்வித ஊதியமும் இல்லை. கற்போருக்கான சான்றிதழ்கள் பற்றிய எவ்வித அறிவிப்பும் இல்லை.

 

மேலும், கொரானா பாதிப்பு காரணமாக 8 மாதங்களுக்கு மேல் பள்ளி தொடர்புகளே இல்லாத மாணவர்கள் ,

தற்போது பள்ளி துவங்கியுள்ள நிலையில் ,பள்ளிக்கு வந்தால் அவர்களை ஒருநிலைப்படுத்தி, பள்ளி சூழலுக்கு கொண்டுவந்து , கற்றல்-கற்பித்தல் செயலில் மாணவர்களை ஈடுபாடு கொண்டு வருவதற்கே, குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது தேவைப்படும் போது,

ஆசிரியர்கள் அனைவரும் கற்போம் எழுதுவோம் திட்டத்தில்  கவனம் செலுத்துவதா? அல்லது பள்ளி மாணவர்கள் மீது கவனம் செலுத்துவதா? என்றபடி ஆசிரியர்களிடையே குழப்பத்தையும் மன உளைச்சலையும் கற்போம் எழுதுவோம் திட்டம், ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் கொரானா பாதிப்பு காலத்தில் தன்னார்வலர்கள் அல்லது ஆசிரியர்கள் எழுத்தறிவு பெறாதவர்கள்  இல்லம் தேடி சென்று அவர்களுக்கு வசதியான நேரத்தில், குறிப்பாக மாலை நேரத்தில் கற்பிப்பது என்பது, சாத்தியமற்றது என்பதோடு , பெண் ஆசிரியர் பெருமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமையக்கூடும்.

 ஆகவே, தமிழக அரசு அவசர கதியில் இத்திட்டத்தை செயல்படுத்த முனைவதை விடுத்து கொரோனா பாதிப்புகள் குறையும் வரை இத்திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென  அரசைக் கேட்டுக் கொள்வதாக ஆசிரியர் மன்ற துணைப் பொதுச்செயலாளர் இலா. தியோடர் ராபின்சன் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.