இன்ஜினியரிங் கவுன்சிலிங் சான்றிதழ் பதிவேற்ற சலுகை

 சென்னை; இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்கள், சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான அவகாசம், 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்க்க, உயர் கல்வித் துறை சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி அமைக்கப்பட்டு, ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

விண்ணப்ப பதிவு, ஜூலை, 15ல் துவங்கி, ஆகஸ்ட், 16ல் முடிந்தது.விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களின் ஒளி பிரதிகளை ஆன்லைனில் பதிவேற்ற, நேற்று முன்தினம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், பிளஸ் 2 முடித்தோருக்கு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு மதிப்பெண்கள், இன்னும் வெளியிடப்படாததால், பல மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்ற, கூடுதல் அவகாசம் கேட்டனர்.

இந்நிலையில், சான்றிதழ் பதிவேற்றுவதற்கான அவகாசம், வரும், 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர் பேராசிரியர் புருஷோத்தமன் இதை அறிவித்தார்.சான்றிதழ் பதிவேற்றம்நீட்டிப்பு காரணமாக, அனைத்து மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் என்ற, ரேண்டம் எண் வெளியிடப்படுவதும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தரவரிசை வெளியிடும் நாளும் தள்ளிப்போகும் என, கவுன்சிலிங் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.