10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள் மாறாட்ட அபாயம் ?

முக கவசம் அணிவது கட்டாயம் என்பதால், பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் ஏற்பட்டு விடாமல், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என,

ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும், 15ம் தேதி முதல், 25 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
ஒவ்வொருவரும், முகக் கவசம் அணிந்த பின்பே, தேர்வு மையங்களுக்குள் நுழைய வேண்டும். கைகளை சோப்பால் சுத்தம் செய்து, அதன்பின், கிருமி நாசினியால் கூடுதல் சுத்தம் செய்ய வேண்டும் என, கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், முக கவசம் அணிவதால், முகத்தின் ஒரு பகுதி மறைக்கப்பட்டு, ஆள் மாறாட்டம் நடந்து விடும் அபாயம் உள்ளது.
எனவே, ஆள் மாறாட்ட சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல், எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை கண்காணிப்பாளர்கள், தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களை, அவர்களது அடையாள அட்டையை பார்த்து, சோதனை செய்ய வேண்டும்.மாணவர்களின் முக கவசத்தை லேசாக விலக்க வைத்து, அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என, ஆலோசனை தரப்பட்டுள்ளது.