பள்ளி, கல்லூரிகள் திறந்த பின் பின்பற்ற வேண்டியது என்ன?

பள்ளி, கல்லூரிகள் திறந்த பின் பின்பற்ற வேண்டியது என்ன?
புதுடில்லி:கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்து வருகிறது.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மார்ச், 16லிருந்து, நாடு முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, ஆகஸ்டில் துவங்கலாம் என்றும், செப்டம்பரில் இருந்து வகுப்புகளை துவங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், பல்கலை மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.அதே நேரத்தில், பள்ளிகளில் வகுப்புகள் துவங்குவது குறித்து, இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 'ஆன்லைன்' மூலமாக பாடங்களை நடத்தும்படி ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த பட்டியலை, மனிதவள அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, பள்ளி கல்வித் துறையினர், பல்கலை மானியக் குழுவினர் தயாரித்து வருகின்றனர்.இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:கொரோனா பாதிப்புக்குப் பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும்போது, மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

பள்ளிகள் திறக்கப்பட்ட தும், மாணவர்கள் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்படும். ஆய்வகங்கள், கழிப்பறை ஆகியவற்றில் சுகாதார வசதி கள் செய்யப்பட வேண்டும். வகுப்புகளிலும், பஸ்களில் வரும்போதும், சமூக விலகல் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அடிக்கடி கைகளை கழுவும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். காலை பிரார்த்தனை கூட்டம், மைதானங்களில் விளையாடுவது போன்ற நடைமுறைகளை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு விதிமுறைகளுடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.