பள்ளி, கல்லுாரிகளில் இன்று பணிகள் துவக்கம்

சென்னை : பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், இன்று முதல் வழக்கமான பணிகள் துவங்க உள்ளன. கல்வி நிறுவன வளாகங்களில், தனிமனித இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பரவலால், இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த, பள்ளி, கல்லுாரிகள், இன்று திறக்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு விடுமுறை என்பதால், 50 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே, தேர்வு பணிகளை துவங்க உள்ளனர். இன்று முதல் நாளில், பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. அதில், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது, சமூக இடைவெளியுடன் நடந்து கொள்வது, முகக் கவசம் அணிவது போன்ற நடைமுறைகள், கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

மேலும், பள்ளி, கல்லுாரி வளாகங்களை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து, தொற்றை தடுக்க வேண்டும் என, வளாக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை பல்கலையில், நாட்டு நலப்பணி திட்டப் பிரிவு வழியாக, அலுவலர்கள் மற்றும் பேராசிரியர் களுக்கான, கொரோனா வழிகாட்டுதல் கூட்டம் நடக்க உள்ளதாக, வளாக இயக்குனர் பேராசிரியர், சுந்தரம் தெரிவித்தார்.