இரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.12 லட்சத்தை இழந்த ஆசிரியை

சென்னை கொளத்தூர் அன்னபூர்ணா நகரை சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா(38). இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தன்னுடன் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் மூலம் வடபழனி அழகிரி நகரில் உள்ள சிவகுமார், வனிதா, பிரபாகர் ஆகியோர் அறிமுகமானார்கள். அப்போது சிவகுமார் எங்கள் நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் தினமும் ரூ.410 வீதம் 200 நாட்களுக்கு உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பிய ஆசிரியை ஸ்ரீ பிரியா பணத்திற்கு ஆசைப்பட்டு ரொக்கமாக ரூ.2 லட்சமும் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
பின்னர் அவர்கள் கூறியபடி முதல் ஒரு மாதம் ஸ்ரீ பிரியா வங்கி கணக்கில் பணத்தை சிவகுமார், வனிதா, பிரபாகர் ஆகியோர் செலுத்தி வந்துள்ளனர். அதன்பிறகு பணத்தை அவர்கள் வங்கி கணக்கில் செலுத்த வில்லை. இதனால் அதிர்ச்சியடைநத் ஸ்ரீ பிரியா உடனே சிவகுமாரிடம் கேட்டுள்ளார். அப்போது நீங்கள் கொடுத்த பணத்திற்கு புதிய கார் ஒன்று வாங்கி தருவதாக கூறினார். ஆனால் காரும் வாங்கி தரவில்லை. அதன்பிறகு அவர்களை தொடர்பும் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
 
உடனே சிவகுமார் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது அலுவலகம் பல நாட்களாக பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து தனியார் பள்ளி ஆசிரியை ஸ்ரீ பிரியா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவகுமார், வனிதா, பிரபாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.