ஆசிரியர் தகுதி தேர்வு 5.42 லட்சம் பேர், 'பாஸ்'

சென்னை:மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், 22.55 சதவீதமான, 5.42 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.தமிழகத்தில், மாநில அளவிலான இந்தத் தேர்வு, 'டெட்' என்ற பெயரிலும், மத்திய அரசு சார்பில், நாடு முழுவதும், 'சிடெட்' என்ற பெயரிலும் நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் சிடெட் தேர்வு, இம்மாதம், 8ம் தேதி நாடு முழுவதும், 110 நகரங்களில், 2,935 மையங்களில் நடந்தது. இந்த தேர்வுக்கு, 28.32 லட்சம் பேர் பதிவு செய்து, 24.05 லட்சம் பேர்
பங்கேற்றனர்.இதற்கான முடிவுகளை, தேர்வை நடத்தியமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது. நாடு முழுவதும் மொத்தம், 22.55 சதவீதமான,
5.42 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அவர்களில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் தகுதிக்கான, முதல் தாள் தேர்வில், 2.47 லட்சம் பேரும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் தகுதிக்கான, இரண்டாம் தாள் தேர்வில், 2.95 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம், 3.12 லட்சம் பெண்கள் உட்பட, 5.42 லட்சம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.