முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு 1.85 லட்சம் பேருக்கு அனுமதி

சென்னை, முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு, 154 தேர்வு மையங்களில் நடக்கும் என்றும், 1.85 லட்சம் பேர் எழுத உள்ளதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது. இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா, வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர், நிலை -1க்கான தேர்வு, வரும், 27, 28, 29ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகம் முழுவதும், 154 தேர்வு மையங்களில், காலை, மாலை இரு வேளைகளிலும் நடத்தப்படும் தேர்வில், 1.85 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, 1.03 லட்சம் பேர், இதுவரை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், டி.ஆர்.பி.,யின் மாதிரி பயிற்சி தேர்வுக்கு, இணையதளம் வழியே முயற்சித்துள்ளனர். இந்த தேர்வில் கணினி வழியில், 150 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்வியும், வரிசையாகவோ, முன்னும், பின்னுமாகவோ தேர்வு செய்யப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், இந்த பயிற்சி தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மேற்கொண்டு, தேர்வு குறித்த நடைமுறைகளை, தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த பயிற்சி தேர்வின் வினாக்கள் முழுவதுமாக, தேர்வர்களின் பயிற்சிக்காகவே தயாரிக்கப்பட்டவை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.