ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். 100 அரசுப் பள்ளிகள், 44 மாணவியர் விடுதிகளில் சூரிய மின் ஒளி வசதி செய்து கொடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப் பேரவையில் நேற்று அறிவித்தார். சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலுரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:
* கல்வி மாவட்ட அளவில், 88 கல்வி மாவட்டங்களில் தலா ரூ.20 லட்சம் செலவில் ரூ.17 கோடியே 60 லட்சம் செலவில் மாதிரிப் பள்ளிகள் கட்டப்படும்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது போல, ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படும்.

* தமிழக சிறைச்சாலைகளில் உள்ள எழுதப்படிக்க தெரியாத 757 கைதிகளுக்கு, அடிப்படை எழுத்தறிவு அளிக்க சிறப்பு எழுத்தறிவு திட்டம் ரூ.14 லட்சத்து 60 ஆயிரம் செலவில் செயல்படுத்தப்படும்.

* விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் ரூ.6 கோடியே 23 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

* அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வருகையை உறுதிப்படுத்தும் வகையில், பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக ரூ.1 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

* 223 மேனிலைப் பள்ளிகளில், தலா ரூ.20 லட்சம் செலவில் ரூ.44 கோடியே 60 லட்சம் செலவில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* அரசுப் பள்ளிகளி-்ல் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க, 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ரூ.16 கோடியே 83 லட்சம் செலவிடப்படும்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த நல்வாழ்வுத் திட்டம் ரூ.12 கோடியே 31 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

* அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 50, அரசு மேனிலைப் பள்ளிகள் 50 என மொத்தம் 100 பள்ளிகள், 44 மாணவியர் விடுதிகளுக்கு சூரிய ஒளிமின் வசதி ரூ.4 கோடியே 51 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
* பெரம்பலூர், திருநெல்வேலி மாவட்டங்களில் ரூ.2 கோடியே 84 லட்சம் ெசலவில் 2 உண்டு உறைவிடப்பள்ளிகள் தொடங்கப்படும்.

* ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் செலவில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்.

* புதிய பாடப்புத்தகம், தகவல் தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி அளிக்கவும், ரூ.20 லட்சம் செலவில் சிறப்பு புலன்கள் அமைக்கப்படும்.
* சென்னை, திருப்பூரில் ரூ.80 லட்சம் செலவில் புதிய நூலக கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.

* சேலம் மாவட்ட மைய நூலகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய குழந்தைகளுக்கான சிறப்பு நூலகம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும். அனைத்து மாவட்ட மைய நூலகங்களில் செவி மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு உடையோருக்கு ரூ.48 லட்சம் செலவில் சிறப்பு பிரிவு தொடங்கப்படும்.

* பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களுக்கு, தலா ரூ.50 ஆயிரம் வீதம் 120 கல்வி மாவட்டங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
* தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இவ்வாறு அறிவுப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.