'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பம்:நாளை மறுநாள் கடைசி

சென்னை:'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது. இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு துறையில் காலியாக உள்ள, 6,491 இடங்களுக்கு, குரூப் - 4 தேர்வு, செப்., 1ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 14ல் துவங்கியது. நாளை மறுநாள் இரவு, 11:59 மணிக்குள், பதிவுகளை முடித்துக் கொள்ள வேண்டும். வரும், 16ம் தேதி வரை, தேர்வு கட்டணம் செலுத்தலாம்

.விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதியை, எக்காரணத்திற்காகவும் நீட்டிக்க இயலாது. எனவே, விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். பயனாளர் குறியீடு அல்லது ரகசிய சொல்லை மறந்து விட்டால், அதை மீட்க, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpscexams.in என்ற, இணையதளத்தில் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.
கட்டணம் செலுத்திய விபரத்தை, விண்ணப்பம் செலுத்தும் பக்கத்தில், உறுதி செய்து கொள்ளலாம்.பணப் பரிமாற்றம் தோல்வியடைந்து விட்டால், கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாளுக்குள், மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டு இருந்தால் மட்டுமே, அது, முழுமையான விண்ணப்பமாகும். விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்ட பின், பதிவுகளை மாற்ற முடியாது.

சந்தேகங்களுக்கு, 044 - 2530 0336, 2530 0337, 2530 0338, 2530 0339 ஆகிய, தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களில், காலை, 10.00 மணி முதல், மாலை, 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.மேலும், helpdesk@tnpscexams.in என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, கோரிக்கைகளை அனுப்பலாம். பொதுவான கேள்விகள் மற்றும் தகவல்களுக்கு, 1800 425 1002 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும், contacttnpsc@gmail.com என்ற, இ - மெயில் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.