ஆதார் எண்ணைத் தவறாக அளித்தால் ரூ.10,000 வரை அபராதம்! - வருகிறது புதிய சட்டம்

கடந்த 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பான் கார்டு கட்டாயம் தேவை என்ற நடைமுறை இருக்கும் இடங்களில், அதற்குப் பதிலாக ஆதார் அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் வரி செலுத்துவோருக்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் தாக்கலின்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரித் தாக்கலுக்குக்கூட பான் கார்டுகளுக்குப் பதில் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.
நாட்டில் 120 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 41 கோடி பான் நம்பர்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், 22 கோடி பான் கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
ஆதார் அட்டை - பான் கார்டு
பான் கார்டுகளுக்குப் பதில் ஆதார் எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆதார் எண்களைத் தவறாக அளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. பணப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட நடைமுறைகளின்போது தங்கள் ஆதார் எண் குறித்த தகவல்களைத் தவறாக அளிப்பவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறது. இந்தச் சட்டம் வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.