10ம் வகுப்பு செய்முறை பயிற்சி விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை -பத்தாம் வகுப்பு தேர்வை, மார்ச்சில் எழுத உள்ள தனி தேர்வர்கள், தங்கள்
பெயரை பதிவு செய்ய, இன்றே கடைசி நாள்.பள்ளியில் படிக்காமல் அல்லது பள்ளியில் படித்து, சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்கள், 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை, தனி தேர்வாக எழுதலாம். அடுத்தாண்டு, மார்ச்சில் நடக்கவுள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனி தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.செய்முறை தேர்வுக்கு முன், செய்முறை பயிற்சி வகுப்பிலும் பங்கேற்க வேண்டும். எனவே, மார்ச்சில் பொதுத்தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு, தங்கள் பெயரை, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 6ல் துவங்கியது. இந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், தேர்வு துறையின், www.dge.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தங்கள் விபரங்களுடன், இன்று விண்ணப்பிக்கலாம் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.