இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்ப பதிவுக்கு நாளை கடைசி

சென்னை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, விண்ணப்பப் பதிவுக்கு, நாளை கடைசி நாள். இதுவரை, 1.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில்
உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தமிழக அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டாம். அதேபோல், நிகர்நிலை பல்கலைகளின் படிப்பில் சேரவும், தமிழக கவுன்சிலிங்கில், கலந்து கொள்ள வேண்டாம்.ஆனால், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு படிப்பில் சேர, தமிழக அரசு நடத்தும், ஒருங்கிணைந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். 2018 வரை, அண்ணா பல்கலை நடத்திய கவுன்சிலிங்கை, இந்த ஆண்டு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.
இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு, மே, 2ல் துவங்கியது. மாணவர்கள் தங்கள் விபரங்களை, https://tneaonline.in என்ற இணையதளத்தில், பதிவு செய்து வருகின்றனர். நேற்று மாலை வரை, 1.30 லட்சம் பேர், தங்கள் விபரங்களை பதிவு செய்து, கவுன்சிலிங்குக்கான கட்டணம் செலுத்தியுள்ளனர்.ஒரு மாதமாக நடந்து வரும் ஆன்லைன் பதிவு, நாளையுடன் முடிகிறது. மாணவர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், தங்கள் விபரங்களை விரைந்து பதிவு செய்யும்படி, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது