பிளஸ் 1 பொது தேர்வில் தமிழ் வினாத்தாள் மிகவும், 'ஈசி'

சென்னை:பிளஸ் 1 பொது தேர்வு நேற்று துவங்கிய நிலையில், புதிய பாட திட்டத்தில், தமிழ் வினாத்தாள் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1 பொதுதேர்வு, 2017 - 18ம் கல்வி ஆண்டில் அறிமுகமானது. இதன்படி, இரண்டாம் முறையாக, இந்த ஆண்டு, பிளஸ் 1 பொது தேர்வு, நேற்று துவங்கியது. இந்த தேர்வில், 8.16 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.இந்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தில், பிளஸ் 1 தேர்வு நடக்கிறது. புதிய வினாத்தாள் முறை அறிமுகமாகியுள்ளது. அதேபோல, மொழிப் பாடங்களுக்கு, இரண்டு தாள்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரே தாள் தேர்வு அறிமுகமாகி உள்ளது.
இப்படி பல்வேறு மாற்றங்களுடன் நடக்கும் பொதுத் தேர்வு என்பதால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், நேற்றைய பொதுத் தேர்வு, மாணவர்களுக்கு மிகவும் எளிதாக இருந்தது. மொத்தம், 90 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், மாணவர்களின் தேர்ச்சிக்கு பாதிப்பில்லாத வகையில் கேள்விகள் இடம் பெற்றன.
வினாத் தாள் குறித்து, சென்னையை சேர்ந்த தமிழ் ஆசிரியை, ஜெயலட்சுமி கூறியதாவது:புதிய பாட திட்டம், புதிய தேர்வு முறையால், மாணவர்களுக்கு அதிக பயிற்சி அளித்தோம். வினாத் தாள் எளிமையாகவே இருந்தது. வினாத் தாளில், மாணவர்கள் யோசித்து பதில் அளிக்கும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் உள்ளது போல,தரமான கல்வியை, தமிழக மாணவர்கள் பெறும் வகையில், வினாத் தாளும் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவ - மாணவியர் தேர்ச்சி பெறுவதில் பிரச்னை இல்லை. அதிக மதிப்பெண் பெறுவதற்கு, அதிக பயிற்சி எடுக்க வேண்டியது முக்கியம். இவ்வாறு, அவர் கூறினார்.


அடுத்த வாரம் திருத்தம்


பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, அடுத்த வாரம் துவங்க உள்ளது.பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; 19ம் தேதி முடிகிறது. இதுவரை, தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்று முதல், கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட, முக்கிய பாடத் தேர்வுகள் நடக்கின்றன.
இந்நிலையில், நடந்து முடிந்துள்ள, மொழி பாடத் தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணியை, அடுத்த வாரம் துவங்க, தேர்வு துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த முறை, மறுமதிப்பீடு, மறுகூட்டல் பிரச்னைகள் வராமல், விடைத்தாள் திருத்தும் பணியை, செம்மையாக செய்யும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.