எல்.கே.ஜி.,- யூ.கே.ஜி.,யில் நியமனம் விடுப்பில் சென்ற ஆசிரியர்கள்

சிவகங்கை, அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடுப்பில் சென்றனர்.மாணவர் சேர்க்கையை
அதிகரிக்க, நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதனை ஜன., 21 ல் முதல்வர் துவக்கி வைக்கிறார். எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகளை நடத்த உபரி பெண் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒன்றியம் வாரியாக உபரி பெண் ஆசிரியர்களை கணக்கெடுத்து, பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டன.அதில், 'ஜன.,18 ல் (நேற்று) பணியில் சேர வேண்டும்' தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் பணியில் சேராமல் விடுப்பில் சென்றனர். சிலர் உத்தரவை வாங்க மறுத்தனர்.ஆசிரியர்கள் கூறியதாவது: எல்.கே.ஜி.,-யு.கேஜி., குழந்தைகளுக்கு கற்பிக்க மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். அவர்களுக்கு வாய்ப்புத் தராமல் இடைநிலை ஆசிரியர்களை தகுதி இறக்கம் செய்து அங்கன்வாடி மையங்களில் நியமிப்பது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து சங்கங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. விரைவில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதுவரை பணியில் சேரமாட்டோம், என்றனர்.