தீவிர புயலாக உருவெடுக்கும், 'பெய்ட்டி' 16ல் சென்னை அருகே கரை கடக்கும்

சென்னை : வங்க கடலில் தீவிரமாக உருவெடுக்கும், 'பெய்ட்டி' புயல், நாளை மறுநாள் இரவு, சென்னை - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, அதிக பாதிப்பு ஏற்படலாம்.
தீவிர புயலாக,உருவெடுக்கும்,பெய்ட்டி,16ல்,சென்னை அருகே,கரை கடக்கும்


இந்த ஆண்டு, நவ., 1ல், பருவ மழை துவங்கியதும், சில நாட்கள் பெய்தது. பின், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், பரவலாக மழை பெய்தது.

'கஜா' புயல் :

இதையடுத்து, வங்க கடலில் உருவான, 'கஜா' புயல், நவ., 16ல், வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சை, நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள், இன்னும் மீள முடியாமல் உள்ளனர்.

இந்திய பெருங்கடலில், டிச., 9ல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வட மேற்கில் நகர்ந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது, மேலும் வலுப்பெற்று,
இன்று அதிகாலை, புயலாக உருவெடுக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு, தாய்லாந்து வழங்கியுள்ள, 'பெய்ட்டி' என்ற, பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில், தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இப்புயல், நாளை மறுநாள், அதாவது, 16ம் தேதி நள்ளிரவுக்குள், சென்னை - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில், மிக கன மழையும், மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும்.

மரங்கள், மின் கோபுரங்கள், மொபைல் போன் கோபுரங்களுக்கு, அதிக பாதிப்பு ஏற்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை வானிலை ஆய்வு மையம் கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின், துணை பொது இயக்குனர், பாலசந்திரன் பேட்டி: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று புயலாக மாறும். இது, தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே, வரும், 16ம் தேதி கரையை கடக்கும்.

அறிவுறுத்தல் :

அதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், நாளை முதல் இரண்டு நாட்கள், பரவலாக
மழை பெய்யும்; சில இடங்களில் கன மழையும், மிக கன மழையும் பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

பெய்ட்டி புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம் என, கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை, புயல் மற்றும் மழை பாதிப்பில் சேதமாகாமல் வைத்திருக்க, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடல் கொந்தளிப்பு!
'பெய்ட்டி' புயல், வங்க கடலில் சுழலும் நிலையில், நேற்றைய நிலவரப்படி, மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. வரும் நாட்களில், கடல் அலைகள், 15 அடி உயரம் வரை கொந்தளிக்கும் வாய்ப்புள்ளது.எனவே, மீனவர்கள், வரும், 16ம் தேதி வரை, வங்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.