'புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.நாடு முழுவதும், 2019, மே., 5ல், நீட் தேர்வு நடக்க உள்ளது. அதற்கு, இணையதளம் வாயிலாக, நவ., 30க்குள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதுபற்றி மாணவர்களுக்கு வழிகாட்ட, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றிக்கை அனுப்ப வேண்டும் என, ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் நேற்று பிறப்பித்த உத்தரவு:இணையதள வசதி இல்லாமல், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் சிக்கி தவிக்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்துதர வேண்டும். அதேபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.பிற மாவட்ட மாணவர்களும் விண்ணப்பித்து விட்டனரா என்பதை, அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Image may contain: text


பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்து மத்திய

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  கடுமையான விதிகளை வகுத்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிக எடை கொண்ட ஸ்கூல் பேக் தினமும் கொண்டு செல்வதால் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக  நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்தனர். இதன் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
 
இதற்கிடையே  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மாதம் 5ம் தேதி அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்தும் கடுமையான விதிகளை வகுத்துள்ளது. மேலும் கல்வித்துறையின்கீழ் வரும் அனைத்து பள்ளிகளும் இந்த விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அதன்படி  ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.
என்சிஆர்டி தெரிவித்துள்ளபடி மொழிப்பாடங்களை தவிர்த்து கூடுதல் வகுப்புகள், பாடங்களை மாணவர்களுக்கு ஒரு போதும் நடத்துதல் கூடாது. அதேபோன்று கூடுதலாக புத்தகங்கள், பொருட்களை கொண்டுவர குழந்தைகளை கட்டாயப்படுத்துதல் கூடாது.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஸ்கூல் பேக் எடை 1.5 கிலோவுக்கு மேல் இருத்தல் கூடாது. 3,5 வகுப்பு வரை 2 முதல் 3 கிலோ வரையிலும், ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு 4 கிலோ, எட்டு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு 4.5 கிலோ, பத்தாம் வகுப்புக்கு 5 கிலோவுக்கு மேல் எடை இருத்தல் கூடாது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விதிகளை ஏற்று லட்சத்தீவுகள் அரசு உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கு கடந்த 20ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.