நீட்' பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!!

'நீட்' தேர்வு பயிற்சிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர வேண்டும் எனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப்படி, வினாக்கள் இடம் பெறுவதால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற திணறுகின்றனர். 


சவால் : அதிலும், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவது பெரும் சவாலாக உள்ளது.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேரும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. 2017 - 18ல், சிறப்பு பயிற்சி துவங்கியது. இந்த பயிற்சி பெற்றதில், 20க்கும் குறைவான மாணவர்களே, மருத்துவ படிப்பில் சேர முடிந்து உள்ளது. 


இதையடுத்து, இந்த ஆண்டு, நீட் பயிற்சியை, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே நடத்த, பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, 120 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, நீட் கற்றல் பயிற்சி தரப்படுகிறது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களின், அரசு பள்ளி ஆசிரியர்கள், நீட் கற்றல் பயிற்சி பெற வராமல், டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், பள்ளி கல்வி உயர் அதிகாரி களுக்கு புகார் அளித்து உள்ளனர்.

சஸ்பெண்ட் : எனவே, முதல் கட்டமாக, நீட் பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால், டிமிக்கி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், 'சஸ்பெண்ட்' செய்யவும், சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



'புதிய ஆசிரியர்கள்?' : 'நீட்' பயிற்சியை புறக்கணிப்பது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது: புதிய பாடத்திட்டம் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, புதிய முறையில் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுத்து, பொது தேர்வுக்கு பயிற்சி தர வேண்டியுள்ளது.இந்த நேரத்தில், நீட் பயிற்சியில், ஆசிரியர்களால் பங்கேற்க முடியாது. தேவைப்பட்டால், நீட் பயிற்சிக்கு புதிய ஆசிரியர்களை, அரசு நியமிக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.