தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்வு!

புதுதில்லி: கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒருவரை மட்டுமே மத்திய தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் இருந்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களில் நல்லாசிரியர் பட்டியலை உருவாக்கி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
ஆனால், இந்த முறை மாநில அரசுகள் நல்லாசிரியர்களை தேர்வு செய்ய முடியாது. ஆசிரியர்களே நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தேசிய ஆசிரியர் விருதுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த ஆசிரியர்களில் 6 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஸதி மட்டும் விருதுக்கு தேர்வாகியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆசிரியை ஸதி, மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ஸதிக்கு ஆசிரியர் தினமான வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, ரூ.50 ஆயிரம் ரொக்கமும், சான்றிதழ் மற்றும் சில்வர் பதக்கமும் கொண்ட விருதினை வழங்குகிறார்.
கடந்த ஆண்டு தேசிய அளவில் 350 பேருக்கு வழங்கப்பட்ட தேசிய நல்லாசிரியர் விருது, இந்த ஆண்டு 45 பேரும் மட்டுமே வழங்கப்படுகிறது. அதில், ஒருவர் மட்டுமே தமிழத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.