குரூப் 1 தேர்வுக்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

குரூப் 1, 1ஏ, 1பி தேர்வு எழுதுவோருக்கான வயது உச்ச வரம்புகளை உயர்த்துவதாக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, குரூப் 1 தேர்வு எழுதும் ஒதுக்கீடு பிரிவினரான எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35ல் இருந்து 37 ஆக உயர்த்தப்படுகிறது.
இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைத் தவிர்த்து இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது.
தமிழகத்தில் டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இதற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்று முதல்வர் பழனிசாமி இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், கிராமப்புற மாணவர்கள் பலர் பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.