''பள்ளிகளில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது,'' என,
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று கேள்வி
நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரம் தொகுதி, தில்லை விடங்கன் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படுமா?
அமைச்சர் செங்கோட்டையன்: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், கட்டடங்கள் கட்டப்படும்.
பாண்டியன்: இப்பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் தான்
உள்ளன. அவற்றை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும். சிதம்பரத்தில், 50
ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தில், கிளை நுாலகம் உள்ளது. அதற்கும், புதிய
கட்டடம் கட்ட வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நுாலகத்திற்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நிதி ஒதுக்குங்கள். பள்ளிக்கு கட்டடம் கட்டப்படும்.
அ.தி.மு.க., - ராமச்சந்திரன்: குன்னம் தொகுதி, முள்ளிகுறிச்சியில்,
உயர்நிலைப் பள்ளி உள்ளது. அப்பகுதி மாணவ, மாணவியர், மேல்நிலை கல்வி படிக்க,
20 கி.மீ., செல்ல வேண்டி உள்ளது. எனவே, அப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக
தரம் உயர்த்த வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: முள்ளிகுறிச்சி முல்லை மலராகும்.
தி.மு.க., - கிரி: செங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இட நெருக்கடி
அதிகமாக உள்ளது. இறை வணக்க கூட்டம் நடத்த இடமில்லை; கழிப்பறை வசதி
போதுமானதாக இல்லை. பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறை இல்லாத
பள்ளிகள் சில உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, நடப்பாண்டு, பள்ளிகளில்,
10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.