ஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம்: கருவூலம்-கணக்குத் துறை தகவல்


வருமான வரி பிடித்தத்துக்கு உள்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை ("பான்') கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கருவூலம்-கணக்குத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அத்துறை சார்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


ஓய்வூதியர்கள் மார்ச் முதல் பிப்ரவரி முடிய ஓராண்டில் பெறும் மொத்த ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவை ஆகியன கணக்கிடப்படுகின்றன. அவற்றின் மீது வருமான வரியானது மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
வரும் 25-ஆம் தேதிக்குள்...வருமான வரிச் சட்டத்தின் கீழ் தகுதியான முதலீடுகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களை ஓய்வூதியர்கள் ஜனவரி மாதத்தில் அளித்தால் அவற்றை சரிபார்த்து உரிய வரி மட்டும் பிடித்தம் செய்யப்படும். இந்த ஆவணங்களை ஜனவரி 25-ஆம் தேதிக்குள் அளிக்கத் தவறினால், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்-கருவூல அலுவலர் தங்களிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் வரி படித்தம் செய்ய நேரிடும்.
 நிரந்தர கணக்கு எண் வேண்டும்: வருமான வரி பிடித்தத்துக்கு உள்படும் ஓய்வூதியர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கவில்லை எனில், ஓய்வூதியத்தின் மீது வருமான வரி பிடித்தம் செய்யப்படும்போது மிகையாக வரி பிடித்தம் செய்ய நேரிடலாம்.
 மிகையாக பிடித்தம் செய்யப்பட்டால்...:மிகையாக பிடித்தம் செய்யப்படும் வருமான ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் திருப்பி அளிக்கப்படாது. வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது மட்டுமே வருமான வரித் துறையிடம் இருந்து அதனை பெற இயலும்.
இதுதொடர்பாக www.tn.gov.inkaruvoolam  என்ற இணையதளம் அல்லது ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் அல்லது கருவூல அலுவலரிடம் இருந்து அறியலாம்.
ஓய்வூதியர்கள் தாங்கள் பெறும ஓய்வூதியம், முதலீடுகள், பிடித்தம் செய்யப்பட வேண்டிய விவரங்களை ஆண்டு தொடக்கத்திலேயே தெரிவிக்க ஏதுவாக உரிய படிவம் உள்ளது. அதனை, www.tn.gov.inkaruvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் அல்லது கருவூலத்தில் இருந்தும் பெறலாம்.
 www.incometaxindiaefilling.gov.in இணையதளத்தில் தங்களது வரி வரவு விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம். TRACES என்ற இணையதளத்தில் இருந்து பெறப்படும் படிவம் 16-ஐ ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் அல்லது கருவூல அலுவலர் அல்லது உதவி கருவூல அலுவலரால் கையெழுத்திட்டு வரும் மே 31-க்குள் வழங்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.