கே.வி.பள்ளிகளில் 'எம்.பி. கோட்டா' சேர்க்கை 10 ஆக உயர்வு

கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.,க்கள் ஒதுக்கீடு, ஆறு இடங்களில் இருந்து, 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.பி.,யும்., ஆறு மாணவர்களை சிபாரிசின் படி, கே.வி., பள்ளிகளில் சேர்க்க முடியும். இந்த ஒதுக்கீடு, வரும் கல்வி ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 10 மாணவர்களை எம்.பி.,க்கள் சிபாரிசு செய்யலாம். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை, சி.பி.எஸ்.இ., இயக்குனர் சந்தோஷ் குமார் மல் பிறப்பித்துள்ளார். மேலும், ஒதுக்கீட்டில் சில திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

* லோக்சபா எம்.பி.,க்கள், தங்கள் தொகுதியில் உள்ள, கே.வி., பள்ளிகளுக்கும்; தன் தொகுதியில் பள்ளி இல்லையென்றால், அருகிலுள்ள அடுத்த தொகுதி பள்ளிக்கும் சிபாரிசு செய்யலாம்
* ராஜ்யசபா எம்.பி.,க்கள், தாங்கள் வசிக்கும் தொகுதி அல்லது அதற்கு அருகிலுள்ள தொகுதிக்கு மட்டுமே சிபாரிசு செய்யலாம். நியமன எம்.பி.,க்கள், இந்தியாவிலுள்ள எந்த கே.வி.,க்கும் 
சிபாரிசு தரலாம்
* இந்த ஒதுக்கீடு, வகுப்பின் மாணவர் எண்ணிக்கைக்கு அதிகமாக இருக்கலாம். 
* சிபாரிசுப்படி மாணவர் சேர்க்கை, கல்வி ஆண்டு துவக் கம் முதல், ஜூலை 31 வரை மட்டுமே நடக்கும். அதன்பின், சிபாரிசை ஏற்க முடியாது
** முதல் வகுப்புக்கு முந்தைய கே.ஜி., படிப்பு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, எம்.பி.,க்களின் சிபாரிசு பொருந்தாது
* எம்.பி.,க்கள் தங்களுக்கென கே.வி.,தலைமை அலுவலகத்தால் வழங்கப்பட்ட கூப்பன் அல்லது அதற்கான விண்ணப்பம் வழியாக மட்டுமே சிபாரிசு செய்ய வேண்டும்; வேறு வகையிலான எந்த சிபாரிசும் ஏற்கப்படாது
* சிபாரிசில் இருந்தாலும், மாணவர்கள் கே.வி., விதிகளுக்கு உட்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கல்விக்குழு கூடி ஒப்புதல் அளித்துள்ளது. 


8,000 இடங்கள் ஒதுக்கீடு

சிபாரிசின்படி, இந்தியா முழுவதும் கே.வி.,பள்ளிகளில், 8,000 இடங்கள் ஒதுக்கப்படும். எம்.பி., க்களின் சிபாரிசை நீக்கி, கே.வி., பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டுமென, காங்கிரஸ் ஆட்சியின் போது, மனிதவள மேம்பாடு அமைச்சர் கபில்சிபல் கூறினார். அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் திட்டம் கைவிடப்பட்டது. பின், காங்கிரஸ் ஆட்சியிலேயே, 2012ல், எம்.பி., ஒதுக்கீடு மூன்றிலிருந்து, 6 ஆக உயர்த்தப்பட்டது. தற்போதைய பா.ஜ., ஆட்சியில், எம்.பி.,க்கள் ஒதுக்கீடு, 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.