நாளை பள்ளிகள் திறப்பு: இயல்பு நிலையை காட்ட வேண்டுமாம்

'எந்த நிலையில் இருந்தாலும், பள்ளிகளை நாளை திறந்து இயல்பு நிலையை காட்ட வேண்டும்' என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், சுத்தம் செய்யப்படாத பள்ளிகளில், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.


நான்கு மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.


எச்சரிக்கை:

'பள்ளிகளை திறந்தால் தான், இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அர்த்தம். எனவே, பள்ளி விடுமுறையை நீட்டித்தால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். என்ன நிலையில் இருந்தாலும், பள்ளிகளை திறக்க வேண்டியது அந்தந்த தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு' என, அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:'பள்ளியை திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்' என்று கூறிவிட்டு, வேலைக்கான ஆட்களையே வழங்கவில்லை. உள்ளூர் காரர்கள், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் எவ்வளவு தான் வேலை பார்க்க முடியும்.
சில குறிப்பிட்ட மின் சாதன பராமரிப்பு, கீழ்நிலை தொட்டி மற்றும் மேல்நிலை தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தல், கல்லுாரி வளாகத்தை பராமரித்தல், கழிப்பறையை சுத்தம் செய்தல், கரையான் பிடித்த தளவாட பொருட்களை அகற்றுதல் என, முக்கிய பணிகளுக்கு கூட ஆட்கள் இல்லை; பொருளுதவியும் இல்லை.

பகுதிவாசிகள்:

பிற மாவட்ட ஊழியர்களை வரவழைத்து பணிகளை முடிக்க, உதவி இருக்க வேண்டும். அதை விடுத்து, அவ்வப்போது அதிகாரிகள் வந்து, 'விசிட்' அடித்துவிட்டு, 'இன்னும் ரெடியாகலையா?' என கேட்டு, நெருக்கடி தருகின்றனர். பல பள்ளிகளில் அடைக்கலமாகி உள்ள பகுதிவாசிகளை, கட்டாயப்படுத்தி வெளியேற்றுகின்றனர். இயல்புநிலை வந்துள்ளதாக செயற்கையாக காட்ட, கல்வித்துறை இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முழுமையாக சுத்தம் செய்யப்படாத பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில், ஈரமாக இருக்கும் சுவர்கள் மற்றும் குவிக்கப்பட்ட குப்பையால், நோய் பரவும் வாய்ப்புள்ளதாக, பெற்றோர் கவலையடைந்து உள்ளனர்.