வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: இன்று வங்கியில் பணம் எடுப்பது நல்லது

வங்கிகளுக்கு நாளை மறுநாள் முதல் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை நாட்கள் வருகிறது. இதனால், ஏடிஎம் சேவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு மாதத்தின் 2வது, 4வது சனிக்கிழமை பொது விடுமுறையாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்தது. அதற்கு  பதிலாக மாதத்தின் முதல் மற்றும் 3 வது சனிக்கிழமை முழு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டது. 



இந்த நிலையில் நாளை மறுநாள் (24ம் தேதி) மீலாது நபியும், 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையும் வருகிறது. அந்த 2 நாட்களும் அரசு விடுமுறை ஆகும். அதைத்  தொடர்ந்து 26ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதனால், வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4  நாட்கள் விடுமுறை ஆகிறது.


தொடர் விடுமுறையால் வங்கி சேவை பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஏடிஎம்  சேவையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான பணத்தை  இன்றே  வங்கிக்கு சென்று எடுத்து கொள்வது நல்லது