ரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்

புதுடில்லி: ரயில் பயணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன், '139' என்ற எண்ணுக்கு டயல் செய்து, டிக்கெட்டை ரத்து செய்யும் முறை, புத்தாண்டில் அமலுக்கு வருகிறது.

ரயில் புறப்படும் முன், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் எனில், ரயில் நிலையத்துக்கு செல்வது அவசியம். இல்லையெனில், கட்டண தொகையில் பாதி பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணத்தை, நவ.,12ல் ரயில்வே வாரியம் இருமடங்காக உயர்த்தியது.
அனைத்து வகுப்பு டிக்கெட்களுக்கும், இது அமல்படுத்தப்பட்டது. அதாவது, ரயில் புறப்படுவதற்கு, 48 மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, இரண்டாம் வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு ரத்து செய்யப்படும் தொகை, 30 இருந்து, 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு, பிடித்தம் செய்யப்படும் தொகை, 90லிருந்து, 180 ஆகவும் உயர்த்தப்பட்டது.
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கு இந்த தொகை, 60லிருந்து, 120 ரூபாயாகவும், இரண்டடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கு, 100லிருந்து, 200- ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், புத்தாண்டு முதல், ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கு புதிய வசதி அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, '139' என்ற ரயில்வே, 'ஹெல்ப்லைன்' எண்ணை தொடர்பு கொண்டு, டிக்கெட் பதிவு செய்யும் போது அளித்த மொபைல் போன் எண்ணை கூற வேண்டும். அதன் பின், மொபைல் எண்ணில், அனுப்பப்பட்ட, 'ஒன் டைம் பாஸ்வேர்டை' விசாரணை அதிகாரி அல்லது கணிணிமயமாக்கப்பட்ட விசாரணையில் கூறவேண்டும்.
இதையடுத்து, டிக்கெட் ரத்தாகும். பின், ரயில் நிலைய கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட்டை காட்டி, மீதமுள்ள கட்டண தொகையை பெறலாம். இந்த வசதி, 2016, ஜன. 26 முதல் அமலுக்கு
வருகிறது.