ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் 2 வருட பி.எட். புதிய பாடத்திட்டம் ஒரு மாதத்தில் தயார் துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி 2 வருட பி.எட். படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஒரு மாதத்தில் தயாரித்து முடித்து விடும் என்று அதன் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஆசிரியர் கல்வித்தரம்

இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்களை கண்காணிக்கக்கூடிய தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) ஆசிரியர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு வருடம் இருந்த பி.எட். என்கிற ஆசிரியர் பயிற்சியை 2 வருடமாகவும், எம்.எட். என்கிற முதுநிலை ஆசிரியர் பயிற்சியை 2 வருடங்களாகவும் உயர்த்த முடிவு செய்து அறிவித்தது.

இதை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் வரும் 2015-2016-ம் ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடி உள்ளது.

தென் மண்டல கருத்தரங்கு

இந்த நிலையில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கூறியபடி புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் அடங்கிய தென் மண்டல ஆசிரியர் கல்வியியல் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்ட 2 நாள் கருத்தரங்கு சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தியது.

கருத்தரங்கில் தேசிய கல்வி பல்கலைக்கழக பேராசிரியர் கே.ராமச்சந்திரன், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.வி.எஸ்.சவுத்ரி, புதுச்சேரி பல்கலைக்கழக டீன் பேராசிரியர் லலிதா, சைதாப்பேட்டை ஆசிரியர் கல்வியியல் நிறுவன முதல்வர் நிர்மலா, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் கலைச்செல்வன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது:-

பாடத்திட்டம் ஒரு மாதத்தில் தயார்

2 வருட பி.எட் படிப்புக்கு 60 நிபுணர்களை கொண்டு பாடத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதில் ஆங்கிலத்தில் பேச்சாற்றல், யோகா, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவது உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கிய பாடத்திட்டம் தயாராகும். இது இன்னும் ஒரு மாதத்திற்குள் தயாராகிவிடும்.

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், இந்த பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசின் ஒப்புதலும் பெற்று தான் 2 வருட பி.எட். அமல்படுத்துவது குறித்து முடிவு செய்ய முடியும். இப்போது எதுவும் சொல்ல இயலாது. நாங்கள் தயாராக இருப்பதற்காக பாடத்திட்டத்தை தயாரித்து வருகிறோம். பி.எட். மற்றும் எம்.எட். பட்டப்படிப்பை பருவ முறையில் கொண்டுவருவது பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு விஸ்வநாதன் தெரிவித்தார்.