அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு முகாம் வரும் 25-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது.

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறியதாவது: பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் மீண்டும் மாநில அளவில்
முதலிடத்தைப் பிடிக்க மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வகுப்பறையில் மாணவ, மாணவிகளின் கற்கும் திறன்
அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் நடந்த அரையாண்டுத் தேர்வில் 2500 பேர் ஒரு பாடம் முதல் 5 பாடங்கள் வரை தோல்வி அடைந்துள்ளனர். இதுபோன்ற மெல்லக் கற்றல் மற்றும்
அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம் வரும் 25-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
     இது தொடர்பாக அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட இருக்கிறது.
தங்கள் பிள்ளைகளின் கல்வித் திறன் குறித்து பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவர் கல்வியில் பெற்றோர்களின் பங்கு பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட
இருக்கிறது. பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு 40 நாள்களே உள்ளதால், மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும். குறிப்பிட்ட பாடங்களையும்,
வினாத்தாள் புத்தகத்தையும் தொடர்ந்து படித்து பயிற்சி பெறவும் முகாமில் வலியுறுத்தப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.