81 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில், கிராமப்பகுதிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 81 சதவீதத்தினருக்கு அடிப்படை கணித திறன் இல்லை என்று ஆய்வுகளின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
'ஏசர்' அமைப்பின் சார்பில், தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு
வரை படிக்கும், கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வு
செய்யப்பட்டது. இதன் படி, தமிழ் பாடத்தை பொறுத்தவரையில், எழுத்து, வார்த்தை, வாக்கியம், பத்தி என வாசிப்பு திறன் கொண்ட மாணவர்களை தனித்தனியாக ஆய்வு செய்துள்ளனர். இதில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின், 64 சதவீத பேருக்கு தமிழ் வாசிப்பு திறனும், 71 சதவீத மாணவர்களுக்கு ஆங்கில வாசிப்புத்திறனும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கணித பாடத்தில், 81 சதவீத மாணவர்களுக்கு எளிமையான வகுத்தல் கணக்குகளும், 75 சதவீத மாணவர்களுக்கு கழித்தலும், செய்வதற்கு தெரியவில்லை.
கல்வியாளர் பாரதி கூறுகையில், ''கிராமப்புற மாணவர்களின் அடிப்படை கல்வித்தரம் மிகவும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை மற்றும் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கல்வித்தரத்தை பாதிக்கின்றது. இப்பாதிப்பு, பொதுத்தேர்வுகளிலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிராமப்புற மாணவர்களை பின்னுக்கு தள்ளுகிறது,'' என்றார்.