மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு: ஜனவரி 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சி நடத்தும் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பில் சேர வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2-வி
ல் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும். தொழிற்கல்வி என்றால் மருத்துவ ஆய்வுக்கூட நுட்பவியலாளர் படிப்பு படித்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் 50 சதவீத கூட்டு மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 45 சதவீத கூட்டு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். மேலும், 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று 17 வயது பூர்த்தியாகி இருப்பதோடு 32 வயதுக்குள்பட்டவர்களே இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலம் 2 ஆண்டுகள். பயிற்சி மொழி ஆங்கிலம். மாதக் கட்டணம் ரூ.300. இந்தப் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.
படிவங்கள் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும். வருகிற 27-ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.