கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் ஜெர்மன் மொழி நிறுத்தம்: மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெர்மனி பிரதமர்

மத்திய அரசின் கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் ஜெர்மன் மொழி பயிற்றுவிப்பது நிறுத்தப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடியிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி-20 அமைப்பு மாநாட்டு நிகழ்ச்சியின் இடையே பிரதமர் நரேந்திர மோடியும், ஏஞ்சலா மெர்கலும் சந்தித்துப் பேசினர்.
அப்போது மோடியிடம், இந்தியாவில் கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் ஜெர்மன் மொழி பயிற்றுவிப்பு நிறுத்தப்பட்ட விவகாரத்தை மெர்கல் எழுப்பினார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியதாவது:
"இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட வேண்டும். ஜெர்மன் மொழி தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்று பிரதமர் மோடியிடம் மெர்கல் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு மோடி பதிலளிக்கையில், இந்தியக் குழந்தைகள் முடிந்த அளவுக்கு அதிக மொழிகளை கற்றுக் கொள்வது முக்கியம் என்றும், மெர்கலின் கோரிக்கை தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
மோடிக்கு அழைப்பு: இந்தச் சந்திப்பின்போது, ஜெர்மனிக்கு வரும்படி மோடிக்கு மெர்கல் அழைப்பு விடுத்தார். மேலும், இந்தியா-ஜெர்மனி இடையேயான உறவு மிகவும் ஆழமானது என்றும், மோடியின் பயணத்தை ஜெர்மனி ஆவலுடன் எதிர்நோக்குகிறது என்றும் மெர்கல் கூறினார் என்று சையத் அக்பருதீன் தெரிவித்தார்.
சவூதி அரேபிய இளவரசருடன் சந்திப்பு: இந்நிலையில், பிரிஸ்பேன் நகரில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீûஸ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது மோடியிடம், "அனைத்துத் துறைகளிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சவூதி அரேபியா தயாராக உள்ளது' என்று சல்மான் பின் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
முன்னதாக, பிரிஸ்பேன் நகரில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனை மோடி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
காந்தி சிலை திறப்பு: இதனிடையே, குயின்ஸ்லாந்தின் பார்க்லாந்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலையை மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "உலகத்துக்கு தற்போது பயங்கரவாதம், புவி வெப்பமயமாதல் ஆகியவை முக்கியப் பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன. மகாத்மா காந்தியின் வாழ்க்கை, அவரது போதனைகளை நாம் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என்றார்.

மோடி எக்ஸ்பிரஸ்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து சிட்னி நகரம் வரை "மோடி எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் விடப்பட்டுள்ள சிறப்பு ரயில் சேவையை விக்டோரியா மாகாண பன்முக கலாசாரத்துறை அமைச்சர் மேத்யூ கய் தொடங்கி வைத்தார்.
வெளிநாட்டைச் சேர்ந்த பிரதமரின் பெயரில், மெல்போர்னில் ரயில் சேவை இயக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அந்த ரயிலில், சிட்னியில் நடைபெறவுள்ள மோடியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய சமூகத்தினர் 220 பேர் செல்கின்றனர்.
இதுகுறித்து, விக்டோரியா மாகாண அமைச்சர் மேத்யூ கய் தெரிவிக்கையில், "பிரதமர் மோடியின் பயணம், ஆஸ்திரேலிய வாழ் இந்திய சமூகத்தினருக்கு மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உறவுக்கும் இது முக்கியமானதாகும்' என்றார்.
இந்த ரயில் சேவைக்கு, "பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு வரும் மோடியை கௌரவிக்கும் வகையில், இந்த சிறப்பு ரயில் சேவைக்கு ஏற்பாடு செய்ததாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அஸ்வின் போரா தெரிவித்தார்.