இரு ஆண்டுகளாக 'அறிவியல் தமிழ்' நிறுத்திவைப்பு! பள்ளிகளுக்கு போதிய ஆர்வமில்லை; கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

கோவை : அறிவியல் கலைச்சொற்கள், கோட்பாடுகள், அறிஞர்களது கண்டுபிடிப்புகள் குறித்து, தமிழ் மொழியில், எளிய சொற்களின் பயன்பாட்டில் அறிவதற்காக, அறிவியல் தமிழ் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இது, கடந்த இரு ஆண்டுகளாக, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளியில், ஆறு முதல் பிளஸ் ௨ வரையுள்ள மாணவர்களுக்கு, முக்கிய பாடத்திட்டங்களோடு சேர்த்து, அறிவியல் தமிழ் பாடமும் கற்பிக்கப்பட்டு வந்தது.இதில், அறிஞர்களது வாழ்க்கை வரலாறு, கண்டுபிடிப்புகள், கலைச்சொற்கள், கோட்பாடுகள், வரையறைகள் உள்ளிட்டவை, எளிய தமிழ்நடையில் அச்சிடப்பட்டிருக்கும். இதன்வாயிலாக, குறிப்பிட்ட வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தங்களது புத்தகத்தில் உள்ள அறிவியல் பகுதிகள் குறித்து, எளிமையாக விளக்கப்பட்டன. இதற்கு, வாரந்தோறும் குறிப்பிட்ட வகுப்பு நேரமும், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதியில் தேர்வுகளும் நடத்தப்பட்டன. செய்முறை பயிற்சிகளும், செயல் விளக்கங்கள் வாயிலாகவும், வகுப்பு பாடத்திட்டம் வரையறுக்கப்பட்டது. இது, கடந்த, ௨௦௧௧ம் ஆண்டு முதல், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு, பள்ளிகளில் இருந்தோ, அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படாததால், அறிவியல் தமிழ் வகுப்புகள் நடத்துவதில்லை என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.பள்ளிக்கல்வி துறை சார்பில், எவ்வித விளக்கமும் அளிக்காமல், குறிப்பிட்ட பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பது குறித்து, கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விளையாட்டு, இசை, சுற்றுச்சூழல் கல்வி, அறிவியல் தமிழ் போன்ற துணை வகுப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்சத்திலே, மாணவர்களது பொது அறிவை மேம்படுத்த முடியும். முக்கிய பாடங்களுக்கு நிகராக, துணைப்பாட வகுப்புகளுக்கும், முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என்பது பலரது கருத்தாக உள்ளது.

கல்வியாளர்கள் சிலர் கூறுகையில்,'பெரும்பாலான பள்ளிகளில், துணை வகுப்புகள், வெறும் சம்பிரதாய அளவில் மட்டுமே நடக்கின்றன. குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளுக்கு, விளையாட்டு பாடத்திட்டத்திற்கென நேரம் ஒதுக்கப்படுவதில்லை.துணை வகுப்பு பாட நேரத்தையும், முதன்மை பாடப்பிரிவுகளுக்கே ஒதுக்கிவிடுகின்றனர். இந்த மனப்போக்கால் தான், இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட, அறிவியல் தமிழ் பாடத்திட்டம் குறித்து, பள்ளிகள் சார்பிலோ,அதிகாரிகளோ முறையாக விளக்கம் அளிக்காமல் இருக்கின்றனர். இதுமுற்றிலும் தவறான நடைமுறை; பள்ளிக்கல்வித்துறை சார்பில், குறிப்பிட்ட பாடத்திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டதற்கான விளக்கத்தை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

'ஆலோசித்து நடவடிக்கை' : முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் கேட்டபோது,'' அறிவியல் தமிழ் பாடத்திட்டத்திற்கான வகுப்பு மற்றும்பாடத்திட்டம் ஒதுக்கப்படாதது குறித்து, பள்ளிகளில் இருந்துஎவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.