தரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல்

தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அச்சங்கத்தின் தலைவர் கு. திராவிடச்செல்வம் தலைமையில் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


இதில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்த பள்ளிக் கல்வித் துறைக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுத் தெரிவிப்பது. அரசாணை எண்: 720-ஐ எந்த காரணம் கொண்டும் மாற்றம் செய்யக்கூடாது. 100 சதவிகித மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தை உருவாக்கி அதில், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்காமல் உள்ள எம்.பில்- தகுதிக்கான ஊக்கத்தொகையை அளிக்கும் வகையில் அரசாணையில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், அதற்கேற்ப மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாநில மகளிரணிச் செயலர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழுத் தீர்மானங்கள் குறித்து மாநிலப் பொதுச் செயலர் சாமி. சத்தியமூர்த்தி பேசினார்.