'கோவிஷீல்டு டோஸ்' இடைவெளி 8 வாரங்களாக உயர்த்தி உத்தரவு

 'கோவிஷீல்டு டோஸ்' இடைவெளி  8 வாரங்களாக உயர்த்தி உத்தரவுபுதுடில்லி : கொரோனாவுக்கான, 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் இரண்டு, 'டோஸ்' களுக்கும் இடையிலான கால இடைவெளி, எட்டு வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை, மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, 'சீரம்' நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும்; 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டத்தில், டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், உடல் நலக் கோளாறுடன் உள்ள, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.இந்த தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. முதல் டோஸ் செலுத்தப்பட்டு, 28 நாட்களுக்குப் பின், இரண்டாம் டோஸ் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு நேற்று அனுப்பி வைத்தது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:விஞ்ஞான ஆதாரங்களை கருத்தில் கொண்டு, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளி, 28 நாட்களில் இருந்து, ஆறு முதல் எட்டு வாரங்களாக உயர்த்தப்பட்டுஉள்ளது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு, பழைய நடைமுறையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது