பிளஸ் 2 வில் 'ஆல் பாஸ்?' கல்வி அதிகாரிகள் விளக்கம்


 சென்னை : 'பிளஸ் 1 வரை மாணவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டது போல, பிளஸ் 2க்கு ஆல் பாஸ் சாத்தியமில்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆண்டு முழுதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும், ஜன., முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், ஆல் பாஸ் வழங்குவதாக, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. முழு ஆண்டு தேர்வு, பொது தேர்வு உட்பட எந்த தேர்வும் நடத்தப்படாது என, அறிவிக்கப்பட்டது.

பிளஸ் 2க்கு மட்டும் மே, 3 முதல் பொது தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., 'பிளஸ் 2க்கும் ஆல் பாஸ் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்' என, அறிவித்தார். இதனால், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆல் பாஸ் கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:மாணவர்கள் பள்ளிக் கல்வியில் இருந்து, உயர்கல்விக்கு செல்ல, பிளஸ் 2 பொது தேர்வு மிக முக்கியம். அந்த தேர்வில் ஆல் பாஸ் வழங்குவது சாத்தியமில்லை.

பிளஸ் 2வில் பொது தேர்வு நடத்தாவிட்டால், உயர்கல்வி நிறுவனங்கள், தமிழக மாணவர்களை, இன்ஜினியரிங், மருத்துவம், கட்டடவியல், சட்டம் என, எந்த படிப்பிலும் சேர்த்து கொள்ளாது. எனவே, பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கான, எதிர்கால தேவை அடிப்படையில், அவர்களுக்கு பொது தேர்வு நடத்தி, மதிப்பெண் வழங்குவது கட்டாயம். இவ்வாறு அவர்கள் கூறினர்.