ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்க 8 பேர் கொண்ட குழு அமைப்பு: அரசு உத்தரவு

 


கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்க 8 பேர் கொண்ட குழு அமைப்பு: அரசு உத்தரவு

சென்னை:  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடக்க கூட்டுறவுப் பண்டகசாலை ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளான 1.1.2016ல் இருந்து  2020 டிசம்பர் 31ம் தேதி வரை 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தொடக்க கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கான ஊதிய விகித மாற்றத்தினை பரிசீலித்து பரிந்துரை செய்து அறிக்கை அளித்திட குழு அமைக்கப்படுகிறது. இந்தகுழுவின் தலைவராக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் கூடுதல் பதிவாளர் அமலதாஸ் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களாக பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணை பதிவாளர் எஸ்.பாபு, கோயம்புத்தூர்  மண்டல இணை பதிவாளர் .பழனிச்சாமி, சேலம் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், திருநெல்வேலி மண்டல இணை பதிவாளர் அழகிரி, சென்னை கடனற்றவை பிரிவு துணை பதிவாளர் செல்வராஜ், மதுரை சரக துணை பதிவாளர்  சதீஷ்குமார், தூத்துக்குடி சரக துணை பதிவாளர் சுப்புராஜ் ஆகிய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஊழியர்களது ஊதிய மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு பணியாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கைகளை பெற்று, பரிசீலித்து தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதங்கள் மற்றும்  அகவிலைப்படி, மருத்துவப்படி உள்ளிட்ட அனைத்துப்படிகள் வழங்குதல், தேர்வு நிலை, தேக்க நிலை ஊதிய உயர்வு வழங்குதல் ஆகியன குறித்து பரிந்துரைக்கப்பட்டும் ஊதிய விகிதத்தின்படி திருத்தியமைக்கப்படும் ஊதியத்தில் முரண்பாடுகள்  ஏதும் ஏற்படா வண்ணம், குழுவின் அறிக்கை தயார் செய்திடவும், குழு அளிக்கும் பரிந்துரையின்படி கூட்டுறவு பண்டக சாலைகளுக்கு ஏற்படக்கூடிய கூடுதல் நிதிச் செலவினம் மற்றும் இக்கூடுதல் செலவினத்தை ஏற்கும் திறன் ஆகியவற்றை  பரிசீலித்து அறிக்கை தயாரித்து அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.