கணினி அறிவியல் ஆசிரியர் பணி 742 பேருக்கு ௨ நாள் கவுன்சிலிங்


 சென்னை:அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணிக்கு முதன் முதலாக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான பணி நியமன கவுன்சிலிங் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.இந்த பதவிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, 'ஆன்லைன்' வழியாக தேர்வு நடத்தப்பட்டது.


தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள், சில நாட்களுக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டன.அதை தொடர்ந்து, 742 பேருக்கு, முதற்கட்டமாக பணி நியமன கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' வழியில் பணியிடங்களை தேர்வு செய்யும் வகையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

அரசாணையின்படி, கல்வி தகுதி மற்றும் சான்றிதழ்களை கவனமாக சரிபார்த்து கொள்ளுமாறு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அவசர கதி!கணினி அறிவியல் ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

நீதிபதி ஆதிநாதன் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டு, விசாரணை துவங்கியுள்ளது. இந் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அவசரமாக, தேர்ச்சிப் பட்டியலை வெளியிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய பட்டியலை பெற்று, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் அவசர கதியில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணி நியமன பணிகளை மேற்கொள்வதாகவும், தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.