பழைய பஸ் பாஸ் காட்டி மாணவர்கள் பயணிக்கலாம்

 


சென்னை:கல்லுாரி மாணவர்கள், கடந்தாண்டு வழங்கப்பட்ட பஸ் பாசைக் காட்டி, மாநகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.


சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர், போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில், இம்மாதம், 7ம் தேதி முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் கல்லுாரிகளுக்கு செல்கின்றனர்.

அவர்களுக்கான, இலவச பயண அட்டை அச்சடித்து வழங்குவதற்கான கால அளவு குறைவாக உள்ளது. எனவே, கடந்தாண்டு வழங்கப்பட்ட பஸ் பாசைக் காட்டினாலோ அல்லது சீருடையுடன் இருந்தாலோ, இருப்பிடத்தில் இருந்து கல்லுாரி வரை, வரும், 31ம் தேதி வரை பயணிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது