வருமான வரி ரீபண்டு ரூ1.18 லட்சம் கோடி

 


புதுடில்லி:மத்திய வருமான வரித் துறை, 6 மாத காலத்தில், 33 லட்சம் பேருக்கு, 1.18 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து, வருமான வரித் துறை மேலும் தெரிவித்துள்ளதாவது:செப்டம்பர், 29ம் தேதி வரையிலான, 6 மாத காலத்தில், 1.18 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு தொகை, 33.54 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதில், தனிநபர் வருமான வரி ரீபண்டாக, 31.75 லட்சம் பேருக்கு, 32 ஆயிரத்து, 230 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


நிறுவன வரி ரீபண்டாக, 1.78 லட்சம் பேருக்கு, 86 ஆயிரத்து, 94 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரி செலுத்துவோருக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வரி தொடர்பான சேவைகளை வழங்க, அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, வருமான வரி ரீபண்டு தொகைகளை விரைந்து வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது