கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய முடிவு.

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து, பள்ளி கல்வி அமைச்சர்,செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிய மாணவர்கள் சேர்க்கை, நேற்று முன்தினம் துவங்கியது.மாணவர்கள் சேர்க்கப்பட்டதும், இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

சமூக இடைவெளியை பின்பற்றி, மாணவர்கள் மற்றும் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கை நிலவரம் குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை; பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை துவக்குதல்; பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பை நடத்துதல்; ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்குதல், புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த நிபுணர் குழு அமைத்தல் உட்பட, பல பிரச்னைகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது.ஒவ்வொரு வாரமும், அந்தந்த வாரம் நடந்த செயல்பாடுகள் குறித்தும், அடுத்தடுத்த நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.