தேசிய நல்லாசிரியர் விருது: தலைமை ஆசிரியை நெகிழ்ச்சி

  தேசிய நல்லாசிரியர் விருது: தலைமை ஆசிரியை நெகிழ்ச்சிசென்னை; ''பள்ளியின் வளர்ச்சி பணிக்கு, முழு ஒத்துழைப்பு அளித்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளால் தான், எனக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது,'' என, தலைமை ஆசிரியை சரஸ்வதி தெரிவித்தார்.

தேசிய அளவில் நல்லாசிரியர் விருதுக்கு, தமிழகத்தில், இருவர் உட்பட, நாடு முழுதும், 47 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து தேர்வான, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி அளித்த பேட்டி:என் தந்தை சின்னசாமி பாண்டியன், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்.என் தாயும், ஆசிரியையாக பணியாற்றினார்.

என் பெற்றோரின் அரவணைப்புக்கும், அவர்களின் முயற்சிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்கனவே, பாரம்பரியமிக்க பள்ளியாகவே திகழ்ந்தது. அதில், கொஞ்சமும் குறையாமல், பராமரித்து வர, பள்ளி கல்வி அதிகாரிகளும், மாணவர்களும், பெற்றோரும், பள்ளியின், 121 ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளித்ததால் தான், இந்த விருது கிடைத்துள்ளது.

'தினமலர்' உள்ளிட்ட நாளிதழ்களின் ஒத்துழைப்பும், பள்ளியின் சிறந்த செயல்பாடுகளுக்கு, சரியான நேரத்தில் அங்கீகாரம் தருவதும், பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.தன்னார்வ அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், முன்னாள் மாணவர் அமைப்புகள், பள்ளியின் உள்கட்டமைப்புக்கும், மாணவர்களின் தேவைக்கும் உதவுகின்றன.

பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு, ஒத்துழைப்பு அளித்துள்ளது. இந்த செயல்பாடுகளுக்கும், அனைவரின் ஒத்துழைப்புக்கும், எனக்கு இந்த விருது கிடைத்துள்ளதாகவே கருதுகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.