ஆசிரியர் குற்ற பின்னணி ஆய்வு செய்ய உத்தரவு.

தமிழக
அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்களுக்கு, குற்றவியல் பின்னணி உள்ளதா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய - மாநில அளவில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.மாநில அரசின் விருதுக்கு பிறகும், சிறப்பாக செயல்படுவோருக்கு, மத்திய அரசின் விருது பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு, விருது பெறுவோருக்கான தகுதி பட்டியலை, மத்திய - மாநில அரசுகள் தயார் செய்துள்ளன.இந்த பட்டியலில் உள்ள ஆசிரியர்களை இறுதி செய்யும் முன், அவர்களுக்கு குற்றவியல் பின்னணி உள்ளதா என, ஆய்வு செய்யுமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும், போலீஸ் வழியாக, நல்லாசிரியர் பட்டியலில் உள்ளவர்களின் தகுதியையும், அவர்கள் மீது வழக்குகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்யுமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்