கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்

 கலை, அறிவியல் கல்லுாரிகளில் ஆக. 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கியது. தேர்வுக்கு தயாராக 450 மணிநேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் ஜூன் 15 ல் இளங்கலை இரண்டாம், 3ம் ஆண்டும், முதுகலை இரண்டாம் ஆண்டு வகுப்புகளும் துவங்கும். கொரோனாவால் கல்லுாரிகள் செயல்படவில்லை. செமஸ்டர் தேர்வு நடத்த குறைந்தது 90 வேலை நாட்கள் கல்லுாரி செயல்பட வேண்டும்.

டிசம்பர் முதல் வாரத்தில் பருவ தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.ஆன்லைனில் பாடம் நடத்த முடிவு செய்து மே மாதம் 2 ஆயிரம் பேராசிரியர்களுக்கு 'வெபினார்' பயிற்சி 2 நாட்கள் நடந்தது. ஆன்லைனில் பாடம் நடத்துவது, அதற்கான சாப்ட்வேர்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.மாநிலம் முழுவதும் ஆக. 3ல் ஆன்-லைன் வகுப்புகள் துவங்கின.

காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு நடைபெறும். ஒரு மணிநேரம் உணவு இடைவேளை. பேராசிரியர்களுக்கு வாரம் 22 மணிநேரத்திற்கு கால அட்டவணை ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவையும் பொருட்படுத்தாமல் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவதை பெற்றோர் வரவேற்றுள்ளனர்.