எட்டு வகை தேர்வுகளுக்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு

 

சென்னை; அடுத்த மாதம் துவங்க உள்ள, துணை தேர்வு உள்ளிட்ட எட்டு வகை தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ள அரசாணை:


பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு தேர்வு துறை இயக்குனரகம் சார்பில், எட்டு வகை தேர்வுகள் செப்., - அக்., மாதங்களில் நடத்தப்பட உள்ளன. 


சமூக இடைவெளி


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, துணை தேர்வு; எட்டாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான தேர்வு; தொடக்க கல்வி டிப்ளமா, அரசு இசை பள்ளி தேர்வுகள்; உடற்கல்வி தேர்வு; சமஸ்கிருதம் நுழைவு தேர்வு ஆகியவை நடக்க உள்ளன.


இந்த தேர்வுகளுக்கு, ஹால் டிக்கெட் வினியோகிக்கும்போது, போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கூட்டம் சேர்வது, அதிகம் பேர் வரிசையாக நிற்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், நேரடியாக ஹால் டிக்கெட் பெற வரக்கூடாது. அவர்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஹால் டிக்கெட் பெற வருவோர் மற்றும் தேர்வு எழுதுவோருக்கு முக கவசம் கட்டாயம். ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 130 பேருக்கு மேல் இருக்கக் கூடாது; 400 சதுர அடி தேர்வு அறையில், 20 மாணவர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. மாணவர்கள் தேவையின்றி காத்திருக்கக் கூடாது.


உடல் வெப்பநிலை 


கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பயணம் காரணமாக, தனிமைப்படுத்தப் பட்டவர்கள், அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறைகளில் மட்டுமே தேர்வை எழுத வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில், தேர்வு மையம் அமைக்கக்கூடாது. லேசர் வெப்பமானி கருவியை பயன்படுத்தி, தேர்வர்கள் மற்றும் ஊழியர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்பே, தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை, 98.6 டிகிரி பாரன்ஹீட்; அதாவது, 37 டிகிரி செல்ஷியஸ். பெரும்பாலானவர்களுக்கு, 97 டிகிரி பாரன்ஹீட் முதல், 99 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகிறது. அதாவது, 36.1 டிகிரி செல்ஷியஸ் முதல், 37.2 டிகிரி செல்ஷியஸ் ஆக கணக்கிடப்படுகிறது.


அரசாணை


எனவே, 99 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அல்லது, 37.2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு மேல், உடல் வெப்பநிலை உள்ளவர்கள், தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படக் கூடாது. இவ்வாறு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன. 


இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணை, பள்ளி கல்வி கமிஷனர், இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டு உள்ளன