சுதந்திர தின விழாவில் மாணவர்கள் பங்கேற்க தடை

 

சென்னை; தமிழகத்தில், சுதந்திர தின விழாக்களில், மாணவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு, சுதந்திர தின விழா, எளிமையாக கொண்டாடப்பட உள்ளது.

தமிழக அரசு சார்பில், சென்னை கோட்டை கொத்தளத்தில், ஆக., 15 அன்று, சுதந்திர தின விழா நடக்க உள்ளது.காலை, 8:45 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கோட்டையில் தேசியக் கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.விழாவில் பங்கேற்க, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், துறை செயலர்கள் என, 400 பேருக்கு மட்டும், அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில், காலை, 9:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர்கள் தேசியக் கொடியேற்ற உள்ளனர்.இந்நிகழ்ச்சியிலும், மாணவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.போலீசார் துப்பாக்கி மரியாதை செலுத்துவர்; அணிவகுப்பு கிடையாது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று, பொன்னாடை போர்த்தி கவுரவிக்க, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

சுதந்திர தின விழாவில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை கவுரவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதிக நபர் பங்கேற்க கூடாது. விழாவில் பங்கேற்போர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.