தமிழகத்தில் மேலும் 6,406 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்தனர்


 சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,30) ஒரே நாளில் 6,406 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.62 லட்சத்தை கடந்தது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,495 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,468 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 27 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 149 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-86) மூலமாக, இன்று மட்டும் 83,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 47 லட்சத்து 38 ஆயிரத்து 47 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,824 பேர் ஆண்கள், 2,671 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,54,837 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,67,219 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா பாதித்த 94 பேர் உயிரிழந்தனர். அதில், 37 பேர் தனியார் மருத்துவமனையிலும், 57 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,231 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,721 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.