10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; ஆக.,10ல் வெளியாகிறது

 சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஆக.,10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கிட்டதட்ட இரண்டு மாதங்களாக நீடித்த ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலனை காக்க 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி, காலை 09:30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.