தனியார் கல்லுாரிகளிலும் 'ஆன்லைன் அட்மிஷன்'

சென்னை : அரசு கல்லுாரிகளை தொடர்ந்து, தனியார் கல்லுாரிகளிலும், 'ஆன்லைன்' வழி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகள் போன்ற வற்றில், மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பம் பெறப்படுகிறது. அதேபோல, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் வழியில், மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன.இதை பின்பற்றி, தனியார் கல்லுாரிகளும், ஆன்லைன் வழியில், மாணவர் சேர்க்கை முறையை அறிமுகம் செய்துள்ளன. இதற்காக, விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், கணினி முறையில், இடங்களை ஒதுக்கீடு செய்யும் வகையில், 'சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு, சிபாரிசு கடிதங்களை பெற்று, இடங்களை ஒதுக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளின் நிர்வாக இடங்களில், குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும், கல்லுாரி மேலாண்மை குழு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளில் சிபாரிசுகளுக்கு ஒதுக்கியுள்ளதாக, கல்லுாரி நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.