ஆன்லைன் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு - தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

தமிழக பள்ளி கல்வித்துறை ஆன்-லைன் வழிக் கல்வி திட்டத்திற்கான
விதிமுறைகளை நேற்று வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், ஆன்-லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக, விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டமானது குழந்தைகள், பெற்றோருக்கு மன ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஏழை - எளிய - குடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரால், ஆண்ட்ராய்டு செல்போன், மடிக்கணினி வாங்க முடியாத சூழல் இருப்பதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ச்சியாக ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்றால் குழந்தைகளுடைய கண்கள் பாதிக்கப்படும் என அரசு மருத்துவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டு இருப்பதையும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டம் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உரிமையை பறிப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.